அதிவெளிச்ச விளக்குகள் பார்வையை பாதிக்குமா? நெல்லை மாணவர்கள் பாதிக்கப்பட்ட பின்னணி

அதிவெளிச்ச விளக்குகள் பார்வையை பாதிக்குமா? நெல்லை மாணவர்கள் பாதிக்கப்பட்ட பின்னணி

Published:Updated:
அதிவெளிச்ச விளக்குகள் பார்வையை பாதிக்குமா? நெல்லை மாணவர்கள் பாதிக்கப்பட்ட பின்னணி
அதிவெளிச்ச விளக்குகள் பார்வையை பாதிக்குமா? நெல்லை மாணவர்கள் பாதிக்கப்பட்ட பின்னணி
0Comments
Share

நெல்லையில், பள்ளி மாணவர்கள் 70 பேர் , அவர்களின் பெற்றோர்கள் 30 பேர்... என மொத்தமாக 100 பேருக்குக் கண் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்’ என்பது அதிர்ச்சித் தகவல். நெல்லை மாவட்டம், ஏர்வாடியிலிருக்கிறது, `எஸ்.வி.இந்து தொடக்கப் பள்ளி’. நேற்றிரவு பள்ளியின் ஆண்டுவிழா. அதில் கலந்துகொண்ட பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் சிலருக்குத்தான் இப்போது கண் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. `ஆண்டுவிழாவில், பயன்படுத்தப்பட்ட அதிக வெளிச்சத்தை உமிழும் விளக்குகள்தான் கண் பாதிப்புக்குக் காரணம்’ என்று சொல்லப்படுகிறது.

விழா நடைபெற்றபோது, கலந்துகொண்டவர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. காலையில் தூங்கி எழுந்தபோதுதான் கண்ணில் எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது; தாரை தாரையாக நீர் வழிந்திருக்கிறது. கண்கள் சிவந்து போய், திறப்பதற்கே கூச்சம் ஏற்பட்டிருக்கிறது. இப்போது, பாதிக்கப்பட்டவர்கள் செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியோடு ஒரு தனியார் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

``எதனால் இப்படி கண்களில் பாதிப்பு ஏற்படுகிறது... இது எத்தனை நாள்களில் சரியாகும்?’’ கண் மருத்துவர் நவீனிடம் கேட்டோம்.

"அல்ட்ராவயலெட் கதிர்களை (Ultraviolet rays) வெளியிடக்கூடிய விளக்குகளைப் பயன்படுத்தியதால், இந்தப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்த விளக்குகள் அதிகமான வெளிச்சத்தை உமிழக்கூடியவை. அந்த விளக்கின் ஒளியைப் பாதுகாப்புக் கருவிகளின் துணையோடுதான் பார்க்க வேண்டும். உதாரணமாக, வெல்டிங் செய்பவர்கள் பயன்படுத்துவதைப் போன்ற பாதுகாப்புக் கண்ணாடிகள் அணிந்துதான் பார்க்க வேண்டும். அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த ஒளியை வீசக்கூடிய விளக்குகளை ஆண்டுவிழாவுக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதிகமான வெளிச்சத்தை வெறும் கண்ணால் பார்த்ததால், `போட்டோடாக்ஸிக் கெராடிட்டிஸ்’ (Phototoxic keratitis) என்ற பாதிப்பு மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது.

இந்த பாதிப்பு ஏற்பட்டால் கண்ணின் கருவிழியில் சிறிய புள்ளிகள் தோன்றலாம். கண்ணைச் சுற்றி வலி , எரிச்சல், உறுத்தல், வீக்கம் ஆகியவை உண்டாகும். கண் சிவப்பாக மாறும். கண்ணிலிருந்து நீர் கொட்டும். கண்ணைத் திறப்பதற்கே கூச்சமாக இருக்கும். மருத்துவரைச் சந்தித்து சிகிச்சையெடுத்துக்கொண்டு, இரண்டு நாள்கள் கண்களை மூடி ஓய்வெடுத்தால் போதும்... கருவிழியின் வெளியிலுள்ள தோல் மீண்டும் உருவாகிவிடும். அதற்குப் பிறகு எந்தப் பாதிப்பும் இல்லை" என்கிறார் கண் மருத்துவர் நவீன்.

இதுபோன்ற விழாக்கள் மட்டுமல்ல... சாதாரணமாக நாம் வீடுகளில் பயன்படுத்தும் எல்இடி விளக்குகளினாலும் கண் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புண்டு. அந்த விளக்குகளும் அல்ட்ராவயலெட் கதிர்களைத்தான் வெளியிடும். தொடர்ந்து மிக அருகில் இதன் ஒளியைப் பார்த்து வருபவர்களுக்கு விழித்திரையிலுள்ள போட்டோ ரெசப்டர்கள் (Photo Receptors) மற்றும் மேக்யூலா (Macula) பாதிப்படைய வாய்ப்புள்ளது.

பள்ளி விழாக்களிலோ, மற்ற விழாக்களிலோ இது போன்று அதிக வெளிச்சத்தை உமிழக்கூடிய ஆபத்தான விளக்குகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, குழந்தைகளை இந்த விளக்குகளின் அருகே செல்ல அனுமதிக்கக் கூடாது.

இரவு நேரங்களில் விளக்குகளை அணைத்து தொலைக்காட்சி, லேப்டாப், செல்போன் ஆகியவற்றை உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும். இவற்றைத் தொடர்ந்து இருட்டில் பயன்படுத்தி வந்தால், விரைவில் கண் நரம்புகள் பாதிப்படைய வாய்ப்புள்ளது. அலுவகங்களில் வேலை பார்ப்பவர்கள் தொடர்ந்து கம்ப்யூட்டரையே பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது. அரை மணி நேரத்துக்கு ஒருமுறை கண்களை 10 முறை தொடர்ந்து சிமிட்டுதல் நல்லது.