வரமும் வாழ்வும் தரும் வழிபாடு!
பூஜையறையில் பூஜை மண்டபம் அமைப்பதற்கான இடம் மேடு பள்ளம் இல்லாமல் சமதளமாக இருக்கவேண்டும்.
ஒன்பது நாள்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவில், ஆதிபராசக்தியை மூன்று வடிவினளாக்கி, ஒவ்வொரு தேவிக்கும் மூன்று நாள்களை வகுப்பது வழக்கம். முதல் மூன்று நாள்கள், துர்கைக்கானவை. துர்கதி என்கிற தவறான பாதையை மாற்றி, சரி செய்விப்பவள் துர்காதேவி!
அடுத்த மூன்று நாள்கள், மகாலட்சுமியின் அருள் தினங்கள். துர்கதி நீங்கிய நம்மை, சத்கதி (நல்ல பாதை)நோக்கி அழைத்துச் செல்பவள் திருமகள். அடுத்த மூன்று நாள்கள், சரஸ்வதியான கலைமகளின் வழிபாட்டு தினங்கள். துர்கதி நீங்கி, நல்ல பாதையை நோக்கிச் செல்லும் நமக்கு மேலான ஞானத்தை அருள்பவள் கலைவாணி!
புரட்டாசி அமாவாசையை அடுத்த பிரதமை தொடங்கி 9 நாள்கள் நவராத்திரி அனுஷ்டிக்கவேண்டும். நவராத்திரிக்கு முதல் நாள் அதாவது அமாவாசை தினத்திலேயே பூஜைக்கு வேண்டியவற்றைச் சேகரிக்கவேண்டும்.
அன்றைய தினமே பூஜையறையைக் கழுவி சுத்தம் செய்யவேண்டும். அன்று ஒருவேளைதான் உணவு. மறுநாள் பிரதமை முதல் பூஜையைத் தொடங்கவேண்டும். பூஜைக்கு உரிய மண்டபத்தின் அளவு, பீடத்தின் அளவு ஆகியவற்றை வியாசர் விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.