நோபல் பரிசு வென்றவர் இறப்பு... சீனாவைக் கண்டிக்கும் மலாலா!
நோபல் பரிசு வென்றவர் இறப்பு... சீனாவைக் கண்டிக்கும் மலாலா!
நோபல் பரிசு வென்ற லியூ சியாபோ (Liu Xiaobo), சீன அரசின் கட்டுபாட்டில் இருந்தபோது இறந்துள்ளார். இதையடுத்து, அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா யூசஃப்சாய், சீனாவைக் கண்டித்துள்ளார்.
சீனக் குடிமகனான லியூ சியோபோ, கடந்த பல ஆண்டுகளாக அந்த நாட்டில் நிலவிவரும் ஒற்றைக் கட்சி ஆட்சிக்கு எதிராகவும் மனித உரிமைக்காகவும் அற வழியில் தொடர்ந்து போராடிவந்தார். வெகுநாள் பொறுத்திருந்த சீன அரசு, கடந்த 2009-ம் ஆண்டு அவருக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. பின்னர், 2010-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு சியாபோவுக்கு அறிவிக்கப்பட்டது. சீன அரசால் கைதுசெய்யப்பட்டிருந்ததால், சியாபோவால் நோபல் பரிசை கடைசி வரை வாங்கமுடியவில்லை. கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு உடல் நலக் கோளாறுகளால் அவதிப்பட்டுவந்த சியாபோ, நுரையீரல் புற்று நோயால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவர், கடந்த வாரம் இறந்தார். அவரது இறப்புக்கு, உலகின் பல்வேறு மனித உரிமைப் போராளிகள் கண்டனம் தெரிவித்துவரும்நிலையில், மலாலாவும் தன் கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்.
இதுகுறித்து மலாலா, 'சுதந்திரத்தை மறுக்கும் எந்த அரசாங்கத்தையும் நான் கண்டிக்கிறேன். சியாபோ என்ன செய்தார் என்பது பற்றி மக்கள் அறிந்துகொண்டு, ஒன்றுகூடி விடுதலைக்காகப் போராட வேண்டும். மக்களின் உரிமைக்காகப் போராட வேண்டும். மக்களின் சமத்துவத்துக்காகப் போராட வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.