மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை மர்ம கும்பலால் பிரபல ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
திருப்புவனம் அருகே லாடனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபல ரெளடி கணேசன்(36), இவர் தற்போது திருப்புவனம் பழையூர் பகுதியில் வசித்து வந்தார். கணேசன் மீது ஏற்கனவே பல காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், திருப்புவனத்தில் கணேசன் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தது வெள்ளிக்கிழமை காலை தெரியவந்தது.
ஏற்கனவே திருப்புவனத்தில் நடந்த ஒரு கொலைச் சம்பவம் தொடர்பாக பழிக்குப்பழியாக இவரை மர்மக்கும்பல் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. திருப்புவனம் காவலர்கள் வழக்குப் பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.